சனி, 15 நவம்பர், 2014

மாண்டும் மறக்கவில்லை மாது பெண்ணாசை செத்தும் மறக்கவில்லை சீமாட்டி கண்ணாசை

கோவிலன்  சரித்திரத்தின்  மூன்றாவது  ராத்திரி பாண்டியன்  சண்டை -கூத்து

 நிகழ்வும்  கலைஞர்களும் - ஓர்  பதிவு -தவசிக்கருப்புசாமி


பசியோடு  அலைய வச்சான்  அந்த  பரமன்

ருசியோடு  நூறு  கலைகள் ...!கசியும் மனம் ...!

நிற்கவச்சி   ஏங்கவச்சி காக்கவச்சி  கற்க வச்சி

விற்கவும்  வச்சிட்டா  னே-

  -ஆகாசம்பட்டு  சேஷாசலம்








தருணமின்னும் துவங்கியிருக்க  வில்லை . அங்கொன்றும்  இங்கொன்றுமாக வேண்டுதலை கூத்துகள்  நிகழ்ந்த  வண்ணமிருக்கின்றன . இருக்கப்பட்ட  ஜமாக்களில் எகாபுரம்  சுப்ருவும்  எலிமேடு  வடிவேலுந்தான் வருடம்  முச்சூடும்  நிறை  செலுத்துபவர்கள் .நிகழ்த்துதல் பாங்கின்    குலையாத கட்டுறுதி .உறுத்தாத  எளிமை  சுப்ருவுக்கு  நிரந்தர  பார்வையாளர்களையும்  ஆதரவாளர்களையும்  பெற்றுத்தந்திருக்கிறது . செல்லுபடியாகாத  இந்த  ஐப்பசி மாதத்தில்  கூத்துக்கலைஞர்  பெரிய சீரகாப்பாடி க . ராசுவை  தொடர்ந்து   மெய்யழகன் அவர்களும் மாரடைப்பால்  காலமானதை  அடுத்து  ரொம்பவும்  மனம்  கனத்து போய் திரிந்துக்கொண்டிருந்தேன் .ஒன்றன்  பின்  ஒன்றாக  இருவர்  இரண்டு  முக்கிய புள்ளிகளை  மண்ணுக்கு  வாரிக்கொடுத்த  இழப்பிலிருந்து  இன்னும்  மீள  முடியவில்லை ....






ராஜுவின்  நினைவஞ்சலி  கூட்டத்துக்கு வாத்தியாரை  அழைக்கும்போதுதான் வெள்ளையம் பாளையம்  மூலக்கடை  பாட்டப்ப சாமிக்கு  கூத்து  விட்டுருக்கும்  தாக்கல் சொல்லி  கூத்துப்பாக்க  கூப்பிட்டார் .கொங்கு  மண்டலத்தில் அரங்கக்கலை வழிப்பாட்டுச்சடங்கு களின்  ஓர்  இன்றியமையாத  கூறு .   சுண்டமேட்டூர் ஆயீ  கோவில் , செங்கோடம்பாளையம்  மேடை  பெருமாள்  கோவில் ,வெள்ள கரட்டூர்  பெருமாள்  கோவில்  மற்றும்  ஊர்ப்புற  அம்மன் கோவில்  நோம்பிகளில்  கூத்து ஓர்  இரவு  கட்டாய  நிகழ்வு .




ஒன்பதரை  மணிக்கெல்லாம்  சின்னு  கோமாளி  தர்பாராகி  விட்டார் . மரம்  பழுத்தாலும்  புளிப்பு  குறையவில்லை , அழுத்ததிருத்தமான அதே  பகடி  எள்ளல் .ஜமா  விருத்தாந்தங்களை  சொல்லி  நிகழ்வு  ஏற்பாட்டாளர்களை வாழ்த்தி  அன்றைய  கூத்து  கோவில சரித்திரத்தின்  மூன்றாம்  இரவு  பாண்டியன்  சண்டை  என  முன்னறிக்கை  செய்யப்பட்டது . பாரத -இராமாயண- இதிகாச  புராண  கதைகள்  உட்பட  180  கதைகள்  கொங்கு சீமை  நிகழ்த்துவெளியில்  நிகழ்த்தப்படுகின்றன .பிரதி  வழி நாம்  வாசிக்கும்  சிலப்பதிகார  கோவலன்  கதையிலிருந்து  மக்கள்  உருவாக்கிய  இக்கதை  மாறுப்பட்டது .


காவிரிப்பூம்  பட்டினம்  வாழ்  கப்பல்  வியாபாரி மாத்தோட்டான் செட்டி  மனையாட்டி  வருணமாலை   தமையன்  வீட்டு திருமணத்திற்கு சீர்  கொண்டு சென்றும்  பிள்ளை  இல்லா கொடுமைக்கு  வரிசையின்றி அவமானப்பட்டு   திரும்புகிறாள் . தவமிருந்து  அவள்  கோவலனை  பெறுவது  ஒரு  ராத்திரி  கதை . கோவலன்  கண்ணகியை  மணந்து  மாதவியிடம்  அடிமையாகி  மீண்டு   வருவது  ஒரு ராத்திரி கதை.. சிலம்பு விற்க  போகும்  கோவலன்  மதுரை  வஞ்சி  பத்தான்  ஆசாரி  சதியில்  கொலையாகுவது  மூன்றாம்  ராத்திரி கதை ...

பார்வை வடிவ  படிம  மொழியை  ஆடும்  சபையில் செயற்படுத்தும்  கூத்தாடி  நிகழ்த்துதல்  மூலம்  சுவை  உணர்வை  அனுபவமாக சமைத்து தருகிறான் .கருத்து  புலப்பாடு  அதன் காத்திரமான அங்கம். ..கலைஞன்  எண் வித   உணர்ச்சி  குறிப்புகள்   மற்றும் குரல் வழி- உடல் வழி- அணி  வழி  உள்ளிட்ட  நான்கு வகை  வெளிப்படுத்துதல் வாயிலாக  அவையோருக்கு ஆக சிறந்த  இரசனையை - உய்த்தலை  உண்டாக்குகிறான்   .


சுப்ருவுக்கு  அன்று  தலை  வேடம் ..முதன்மை பாத்திரம் .. சரியாக  இரவு  பத்துமணிக்கு  அரங்கில்  தோன்றியவர் பூர்வோத்திரங்களை  வருணித்து  முடிக்க  ஒன்றரை மணித்தியாலங்கள்  ஆகியிருந்தது ..
கண்ணுக்கு  வெளிச்சமான்  வேடம்...தாளம் - காலம் -சுருதி  பிசகாத பாட்டு வித்தியாசமான  ஆட்டமுறைமை . புத்திக்கு  உறைத்த கதை.

அர்ச்சுனன்  தபசுக்கு - ஜம்பை,  ஆரவல்லி  சண்டை  அல்லிமுத்து  பந்தயம், மதுரை வீரன் ஆகியவற்றுக்கு  சுத்தமான  ஆதி , அண்ணமார்  சரித்திரத்துக்கும்  நூதன  ஓட்ட நாடகமென்னும் சித்தரவல்லி  கூத்துக்கும்-  நொண்டி  சிந்து .....

இந்த  கோவலன்  கூத்துக்கு  ஓரடி ஆதி  சாப்பில்  அமைந்த ஏக  தாள  மெட்டு  வரிசை பாத்தியம் . அத்துடன்    ஆதி, அடவு, திருப்படை,ரூபகம், ஜம்பை, நொண்டிச்சிந்து,கும்மிதாளம் என்ற தாள வரிசைகளையும்  பாவித்து நிகழ்வுக்கு  செழுமை  சேர்த்தார்கள்







ஆசாரி  சிரமறுப்பேன்

 அருந்தாமாலை  ஸ்தனமறுப்பேன்

 பொன்னரசன்  உடல்  கிழிப்பேன்
#
அத்த  அத்த  மாமி  அத்த

ஆகாத  கனவு  கண்டேன்

வாழ மரம்  சாயக்கண்டேன்

வடிவழகன்  சாக  கண்டேன்

தென்ன  மரம் சாயக்கண்டேன்

என் தேசிகரும்  மடிய க்கண்டேன்
#
கொண்டவளை  சிறையில்  வைத்து

கூத்து பார்க்க  போனேன்  அண்ணா

மங்கையாளை சிறையில்  வைத்து

 மாதாட்டம்  பார்க்க  போனேன்  அண்ணா

#



போன்ற  பாடல்களும் - இசையும்  அம்பலக்கலையின் உயிர்த்தளம். ஆம்  கூத்துப்பாதி  கொட்டுப்பாதி .சேகர்  அவர்களும் , மெய்வேல்  அவர்களும்  மாற்றி  மிருதங்கம்  வாசிக்க அன்றைய  கூத்தின்  பிரதான  அம்சம் முகவீணை.




 ரெட்டிப்பாளையம் குப்பன் அவர்களையடுத்து வந்த தலைமுறையில் செல்வம்   முதல்தரமான முகவீணைக் கலைஞர்.  நாபியில் பிறந்து கண்டத்தில் இழைந்து குழல் வழி வழிந்தோடும் நாதம் கேட்பவரை மனம் பேதலிக்க வைக்கும். அகவலிடுவது, அணுக்கள் கொடுப்பது, சரளி வரிசை என்று தேர்ந்த தெளிந்த இசைஞானம் இவருக்கென்றாலும், இழைத்து, இழைத்து நயமாக்கி அவர் வாசிக்கும் குழல் சோகத்தை, மந்தகாசத்தை, அதிகாரத்தை, ஆணவத்தை, அது எந்த உணர்ச்சி வெளிப்பாடாகயிருப்பினும் பிறழ்வு இன்றி பரிபூரணமாக நம்மை உணரவைக்கும் வித்தைகளையடக்கியது.  உயிர் மூச்சை முதலாக்கி செய்யும் இந்த பிறப்புத் தொழிலுக்கு ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு பிரசவம்.  பிராணசங்கடமேற்று, மக்களை மகிழ்விக்கும் இசையை உற்பவனம் செய்யும் இவர்கள் கலைச் சேவை வெறும் புகழுரைக்கானது மட்டுமன்று!.


கரணம்  தப்பினால்  மரணம்  என்பார்கள். தான்  என்கிற வித்துவானோ  அவர்    எப்பேர்ப்பட்ட  விற்பன்னரோ  கூத்தில் கைத்தாளம்  கலைந்தால்   மிருதங்கம்  வாசிப்பவர் மண்ணை  கவ்வ  வேண்டியதுதான் . அந்த  வகையில்  லயம்  தப்பாது  தாளமடித்த  சுந்தரம் - கொழந்தையப்பன்  இருவரும்  கவனங் கொள்ளத்தக்கவர்கள்

 அன்று  கனகு அப்பு  தாசி  வேடம் ஏற்றிருந்தார் .தெருக்கூத்தில் திருநங்கைகளை பங்கேற்க வைப்பதில் முன்னோடியானவர் கூலிப்பட்டி சுப்ரமணி வாத்தியார் அவர்களே! அவரது ஜமாவில் பங்கு பற்றிய ரேகா அவர்களை தொடர்ந்து ஒக்கிலிப்பட்டி சாமியாருடன் இயங்கிய அபிராமி, புவியரசி,ஆகியோருடன் கனகு அவர்களும் கடந்த பத்தாண்டு காலங்களாக வேடங்களிட்டு ஆடி வருகிறார். ஒப்பு நோக்கும்போது திருநங்கையருக்கு ஆடவர் பெண்டிரைக்காட்டிலும் விஞ்சிய கலைத்தேட்டமும்,நுகர்வும், உற்றுநோக்கி உள்வாங்கும் திறனும் இருப்பதை உணரலாம். மண்டோதரி, அதி வர்ணமாலை, துரோபதை, ஏலக்கன்னி போன்ற
பெருங்கொண்ட கதைமாதர்களாக தோன்றும் கனகு தானதுவாகி பாத்திரத்தை கனம்பண்ணுவதோடு அவையை தனது பல்வேறு கோட்டுச்சித்திரங்கள்,பண்பட்ட ஒயிலாக்கம் வழி நிரப்பித்தருகிறார்.

சுப்ரு அவர்களுடன் கரட்டூர்  செல்வம் (பொன்னரசன் ),அய்யந்துரை ( அருந்தாமாலை ) மெய்வேல் (வஞ்சி  பத்தான் )தருமன் (குப்பு  தாசி ) சீனிவாசன் ( சுப்பு தாசி ) செந்தில்  (பாண்டிய  மன்னன்) ஆகியோரும்  பாகம் ஏற்றிருந்தனர் . வாத்தியார்  என்ற  ஹோதாவில் உருட்டி  மிரட்டி   ஆர்ப்பாட்டங்கள்  ஏதும்  செய்யாத  தோழமையுள்ள  மூத்த  கலைஞன் -  அவன் குறிப்பறிந்து  காரியமாற்றும்  சகபாடிகளை  காண  ஆனந்தமாகயிருந்த அன்றிரவு  நன்றிரவு.

பின்னொட்டு

நிழல்  சாய்ந்த  பக்கம்  குடை  பிடித்து  அதிகாரத்தை  கைப்பற்றி  விடும்  புலவர்  பெருமக்களுக்கு  எப்படியோ  சடையப்ப  வள்ளல்கள் கிடைத்துவிடுகிறார்கள் .போஷகரையும்  புரவலர்களையும்  வாசகர்களையும் கொண்டு  சேர்க்க  ஊடகங்களையும்  ஏற்ப்பாடு  செய்த  பிறகே  பேனா  மூடியை  எழுத  திறக்கும்  நாம் . கூச்சமே  படாது  தகுதிக்கு  மீறிய  அங்கீகாரம்  தேடும்  நாம் , வாய்ப்பு  அருகி  நலிவடைந்து  வரும்  நமது  தொல்கலைகளின்  மேம்பாடு, மீட்டுருவாக்கம் , சீர்மை ,ஆவணமாக்கம் ,மதிப்பீடுகள் ,விமர்சனங்களின்   ஊடாக  சாத்தியப்பட்ட  நகர்வு  மற்றும்  சம்பந்தப்பட்ட   நிகழ்த்துக்கலைஞர்களின் வாழ்வியற்   மேம்பாடு குறித்து  ஒரு  சிந்தனை  தொடர்ச்சியை  மேற்கொள்வதுடன் வாய்  பேசிக்கொண்டிருப்பதை  நிறுத்திவிட்டு  வேலை  மட்டும்  பார்த்தால்  எவ்வளவு  நன்றாக இருக்கும் .

கலைஞன்  பார்வையாளன் இவ்விருவருடைய   உறவு  குறித்த ஆத்மார்த்தமான , தீர்க்கமான புரிந்துணர்வு  இல்லையெனில்  கலை  படைப்பது  வெட்டி  வேலை .


http://youtu.be/q7rV8b2P8zg




கருத்துகள் இல்லை: