வியாழன், 16 ஜூன், 2011

மட்டம்பட்டி பழனி








அப்பனும் பாட்டனும் பண்ணையடிமைகள். ஆசை மகனுக்கோ கூத்தின் பேரில் மிகுதியான ஆவல். பகலில் ஆடு மாடு மேய்ப்பது, இரவல் பட்டி காவலுக்கு போவது என்று நடையொழியாத அல்லல் நிறைந்த வாழ்க்கை! தெக்கித்தி வளவுக்காரர்கள் ஆள் பொறுக்கி கூத்துப் பயில ஓரமாக நின்று வேடிக்கைப் பார்க்கக்கூட பழனிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உயிர் தேடலும் ஊக்கமும் அந்த பாமர மனிதனுக்குள் ஊறிக்கிடந்த கலையார்வத்தை தூண்டிவிட ஓர் ஒத்திகையின்போது கோவலன் நாடகத்தில் கண்ணகி வேடதாரி பாட்டுத் தெரியாமல் தத்தளிக்க, வழக்கமாய் கேட்ட பழனிக்கு வாய்ப்பு கிடைக்க சிக்கென பிடித்துக்கொண்டுவிட்டாரவர். அந்த பிடியின்னும் தளரவில்லை. சதிராட்டத்தில் மாதவி, பின்வரும் பாண்டியன் சண்டையில் கண்ணகி எதிரும் புதிருமான இரும்பெரும் கதாபாத்திரங்கள், அவற்றிற்கிடையேயான முரண்பாடுகள், இவ்வேடப் புனைவு யாரையும் சற்று தயங்கவே செய்யும். பழனிக்கோ மாதவியும் கண்ணகியும் ஓருடலில் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பாத்திரங்கள். மாதவி வேடத்தில் பழனி சொல்லும் சாங்கிய சம்பிரதாயங்கள் பெண் மனப்பாங்கை ஆராயும் ஆர்வலர்களுக்கு ஆகச் சிறந்த உளவியல் தரவுகளாக அமையும். கண்ணகி வேடத்தில் அவர் காட்டும் பரிமாணங்கள் முற்றிலும் வேறுபட்டது. வேடத்தோடு பல்வேறு வாத்தியப் பயிற்சிகளை கற்றுத் தேர்ந்த பழனி பெண் வேடதாரிகளுக்கு மிகச் சிறந்த முன்மாதிரி.

கருத்துகள் இல்லை: